Monday, October 10, 2005

தமிழ் சினிமாவின் விடிவெள்ளி - தங்கர்பச்சான்

தமிழகத்தில் எத்தனையோ சினிமாக்காரர்கள் தோன்றியிருக்கிறார்கள், ஸ்டைல் என்ற பெயரில் ஊரை கெடுத்து குட்டிச் சுவராக்கியிருக்கிறார்கள், லிப் கிஸ் கொடுத்து இளைஞர்களை கவர்ச்சி புயலால் நாசமாக்கியிருக்கிறார்கள், "அவள் அம்மா என் காதலி, என் அப்பா அவள் காதலன்" போன்ற அற்புதமான தத்துவ படங்களை கொடுத்திருக்கிறார்கள், நாளை நாம் தான் தமிழக முதல்வர் என்ற கனவில் கையை சுற்றி சுற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இயக்குனர் இமயங்களின் நாறிப் போன கதைகளுக்கு மத்தியில் "வன்னிய பூமியில்" இருந்து தோன்றிய தங்கர்பச்சானின் படங்கள் தான் சனங்களின் யதார்த்த வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் பலக் காலக்கட்டங்களில் பலர் உருவாகியிருக்கிறார்கள். ஆனால் கிராமத்தில் இருந்து வரும் கலைஞர்களால் தான் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்த முடிந்திருக்கிறது. சினிமாவின் தரம் என்பது வெறும் கிராபிக்கல் அம்சங்களாக, டெக்னிக்கல் சமாச்சாரங்களாக இருப்பதில்லை. கதையம்சம் தான் படத்தின் தரமாக இருக்க முடியும்.

தமிழ் சினிமாவின் ஸ்டீரியோடைப் படங்களுக்கு மத்தியில் கிராமத்தின் ராஜா - பாரதி ராஜா, தமிழ் சினிமாவின் பாதையை மாற்றி அமைத்தார். சமஞ்சது எப்படி என்ற ரீதியில் பாடல்கள் எழுதிய தாடி மற்றும் குடுமிகளுக்கு மத்தியில் அற்புதமான வைர வரிகளை எழுதிய வைரமுத்து, வன்னிய பூமியின் அறிவுமதி அனைவரும் கிராமத்தான்கள் தான். என்னுடைய தமிழ் ஆசிரியர் கிராமத்தான்களால் தான் சினிமாவில் ஜொலிக்க முடியும் என்றார். அது உண்மை தான் என்பதை இவர்களைப் போன்றவர்கள் தான் நிருமித்துக் கொண்டிருக்கிறார்கள்

தமிழ் சினிமாவில் பலர் தோன்றியிருந்தாலும், யதார்த்தம், நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பு போன்றவற்றுக்கு இங்கு பஞ்சம் அதிகம். அதனை களைந்தவர் தங்கர்பச்சான் தான் என்று உறுதியாக சொல்லலாம். தன்னுடைய அழகி மூலம் நிஜ வாழ்க்கையின் பல யதார்த்தங்களை திரையில் கொண்டு வந்தார். இந்த படத்தின் மற்றொரு சிறப்பம்சம் இது வரை திரையில் தோன்றாத வன்னிய பூமியை கொண்டு வந்தது. பலாப்பழத்தின் வாசனையை தமிழ் சினிமாவில் காணக் கூடிய முதல் வாய்ப்பு அப்பொழுது தான் கிடைத்தது.

அவருடைய தற்போதைய "சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி" என்ற படத்தை பார்க்கும் பொழுது நான் என் வாழ்க்கையில் கண்ட பல நிகழ்ச்சிகள் நெஞ்சில் உருண்டோடியது.

என்னுடைய அத்தை ஒருவர் இருக்கிறார். அப்பாவின் தங்கை. ஜெயங்கொண்டத்தில் அரசு வேலையில் இருக்கும் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள். குடிப் பழக்கம் உடையவர். தினமும் ஒயின் ஷாப்பிலும், சாராயக் கடையிலும் தான் வாசம் செய்வார். வீட்டிற்கு வரும் பொழுது தள்ளாடிக் கொண்டே தான் வருவார். கொஞ்சம் கூட பொறுப்பு இருக்காது. அரசு வேலைக்கு ஒழுங்காக செல்ல மாட்டார். கிடைக்கிற எல்லா லோனும் எடுத்து விடுவார். லோன் போக வரும் சம்பளம், சம்பள தேதியில் பிராந்திக் கடையில் கரைந்து போய் விடும். பிறகு வீட்டில் அடி தடி தான். அத்தை கஷ்டப்பட்டு சில வேலைகளுக்கு சென்று சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றுவார். அரசு வேலையில் இருந்தாலும், வருகிற சம்பளத்தை வைத்துக் கொண்டு சுகமாக வாழலாமே என்று பலர் புத்தி மதி சொல்வார்கள். ஒன்றும் காதில் ஏறாது. சம்பள நாள் வந்தால், நேராக அத்தை அவர் ஆபிசுக்கு சென்று விடுவார். அப்பொழுதெல்லாம் வங்கிகளில் பணம் நேரடியாக செல்லாமல் கவரில் சம்பளம் வரும். அவரிடம் இருந்து சம்பள கவர் பிடுங்க ஒரு பெரிய யுத்தமே நடக்கும். பெரிய கச்சேரியே அலுவலக வாசலில் நடக்கும். இந்த கூத்துக்கு பிறகு வேலைக்கு செல்வதையும் மாமா குறைக்க ஆரம்பித்து விட்டார். எதற்கு வம்பு அரசு வேலையாயிற்றே, வேலை போய் விடுமே, என்றாவது ஒரு நாள் திருந்துவார் என்ற எண்ணத்தில் அப்படியே விட்டு விட்டார்கள். அத்தை பல கஷ்டங்களை அனுபவித்தார். இப்படி தொடர்ந்த அவர் வாழ்வில் என் அத்தைப் பெண்ணின் மஞ்சள் நீராட்டு விழா ஒரு திருப்புமுனையாக அமைந்து இவரா இப்படி என்று வியந்து போனோம் ? வாழ்க்கையில் ஏற்படும் ஒரு கணம் சிந்தனை, பல மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது. பலர் கூறிய புத்திமதி அவரை மாற்றவில்லை. ஆனால் சில கணம் தன் மகளை பெரிய மனுஷியாக பார்த்த பொழுது அவருக்குள் ஒரு தீப்பொறி எழுந்து அவரது வாழ்க்கையை மாற்றி விட்டது.

வாழ்க்கை ஒரு படிப்பினை. வாழ்க்கையில் நடக்கும் பல மாற்றங்களை திரைப்படத்தில் கொண்டு வருவது முடியாத காரியம். அந்த முடியாத காரியத்தை செய்ய முடியும் என்ற நம்பிக்கையை தங்கர்பச்சான் ஏற்படுத்தி இருக்கிறார். "சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி" படத்தை பார்த்த பொழுது எனக்கு என் மாமாவின் முகம் தான் ஞாபகத்திற்கு வந்தது. தங்கர்பச்சான் முகத்திற்கும் அவர் முகத்திற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. கதையில் நடக்கும் பல, நிஜ வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. என் வாழ்க்கையில் நான் அனுபவிக்க வில்லை என்றாலும் கண் கூடாக பார்த்து இருக்கிறேன்.

அவருடைய சொல்ல மறந்த கதையிலும் சரி, அழகியிலும் சரி வாழ்க்கையின் யதார்த்தம் பிரதிபலிக்கிறது. சொல்ல மறந்த கதையில் சேரன் அனுபவிக்கும் மன உளைச்சலை அவ்வளவு சரியாக இது வரை தமிழ் சினிமாவில் யாரும் பிரதிபலித்தது இல்லை என்றே நினைக்கிறேன். அழகி பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

இந்த திரைப்படங்களை போலவே அவரின் ஒரு சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது. அது ஒரு பெரிய மரத்தைப் பற்றிய கதை. ஒரு மரத்தை சுற்றி நிகழும் நினைவுகள், பொருட் செலவுக்காக அந்த மரம் வெட்டப்படும் பொழுது ஏற்படும் உளைச்சல். அதனை சுற்றி பின்னப்பட்ட உணர்வு அலை. எனக்கும் அது போன்ற நினைவுகள் உண்டு.

உண்மையான சனங்களின் கலைஞனாக தங்கர்பச்சானை தான் நினைக்க முடிகிறது.

திண்ணையில் விமர்சனம் எழுதியிருக்கும் கோவிந்த் கூறி இருப்பது போல தமிழ் சினிமாவிற்கு தங்கத் தாமரை பெற்று தரும் தகுதி தங்கர்பச்சானுக்கு மட்டுமே உண்டு.

26 comments:

Anonymous said...

அது என்ன இயக்குனர் இமயம் நாறிப் போன கதை - படா நக்கலுப்பா உனக்கு...

ஜெ. ராம்கி said...

Inimey... Thangar Batchaanai Andavanaalum kaapathaa muidhyathu :)

ஜோ/Joe said...

தங்கர் பச்சான் -விடி வெள்ளி என்பது அதிகப்படி .ஆனால் தமிழில் வந்த உருப்படியான இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் என்பதில் சந்தேகம் இல்லை .பி.வாசு படங்களை ஆகாயம் அளவுக்கு புகழ்பவர்களுக்கு இது புரியாது தான்.

Anonymous said...

குருவி குடைந்த கொய்யா பழங்கள் வன்னிய பூமியின் யதார்த்தம் போலும்...எல்லாம் மாயை மக்கா....

Anonymous said...

அட தங்கருக்கு வந்த சோதனைய பாருங்கப்பா, விடிவெள்ளியாம்ல....ஒண்ணுக்கு ரெண்டு தடவை அதை சரியா எழுதுங்கப்பு. விடியாமூஞ்சி...னு எழுதினதா விளக்குமாறு செருப்பொட கிளம்பி வந்துட போறாங்க.....

கொழுவி said...

தங்கர் வெளியே கதைக்குமளவுக்கு அவரின் படங்களிருப்பதில்லை.
மற்றவர்களின் படங்களையும் மற்றவர்களையும் நக்கலடித்துக்கொண்டே அவையெல்லாவற்றையும் தன் படத்திற் புகுத்துவார். நகைச்சுவைக்காட்சிகளை நையாண்டி பண்ணுவார். அழகியில் விவேக்கின் கூத்துக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்? "எந்த மனிதனுக்கும் அவனது சந்தோசம் முன்னாள் காதலியைக் காணும்வரைதான்" என்று சொல்வதற்கு விவேக்கின் அத்தனைக் கூத்துக்களையும் படத்திற் சேர்க்கத் தேவையில்லை. இதே விவேக்கிடம் தங்கர் நல்லா வாங்கிக்கட்டியதும் தெரிந்ததே. இதேபோல்தான் 'குருவி கொடைஞ்ச கொய்யாப்பழம்" பாட்டும்.
ஆபாசப்பாட்டுக்களையும் நடனங்களையும் குறைசொல்லிக்கொண்டேதான் இவ்வளவும் செய்தார். இப்போது 'சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி'யிலும் தன் மனைவிக்கு சினிமாக் கதாநாயகிகள் உடுக்கும் உடையை வாங்கி வந்து அதை அணியும்படி வற்புறுத்தி அதை உடுத்தபடி இருவரும் ஆடுவதற்கு ஒரு பாட்டும் வைத்துள்ளார். இதை எல்லாரும் தான் செய்கிறார்கள். இதற்குள் தான் மட்டும் சுத்தமானவன் என்று சொல்லிக்கொண்டே அவற்றைச் செய்வது சுத்த மோசடி. ஏமாற்று வேலை.
வர்த்தக சினிமாதான் அவரும் எடுக்கிறார். குறைந்தபட்சம் தன் பலவீனங்களையும் உண்மைகளையும் ஒத்துக்கொள்ளும் மனப்பான்மையாவது வேண்டும். அது தங்கரிடம் துளியளவும் இல்லை. குறைந்தபட்சம் சேரன் அளவுக்குக்கூட இல்லை.
இப்போது அவர் தன் படங்களில் சொன்ன கருத்துக்கள் பற்றிக் கூறிய செவ்வியைப் பார்த்தபிறகு அவர் படங்களின் மீதிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போனது தான் மிச்சம். தானும் ஒரே குட்டையில் ஊறின மட்டைதான் என்பதைத் தெளிவாகத் தன் வாயாலேயே சொல்லிவிட்டார்.
தங்கரை இயக்குநராக எனக்குப்பிடிக்கும். எழுத்தாளராக இன்னும் பிடிக்கும். ஆனால் அவரது வாய்தான் பிழை. ஈழத்தமிழர் பற்றி அவர் உண்மையிலேயே கரிசனையும் பரிவும் கொண்டிருக்கிறார் என்பதை நன்கு அறிந்திருந்தும், தமிழ்-தமிழ்த்தேசியம் பற்றி ஓரளவு சார்பு நிலையுள்ளவர் என்று தெரிந்திருந்தும், சினிமா என்று வந்தால் தங்கர் சராசரிதான் என்பது என் முடிபு. விடிவெள்ளி, நம்பிக்கை நட்சத்திரம் என்பதெல்லாம் தங்கர் மேல் சுமத்தப்படும் மிகப்பெரிய சுமைதான். அவையே அவரின் அழிவுக்கும் காரணமாகும். வெறும் நாலு படம் மட்டுமே, அதுவும் தானே குறையென்று சொல்லும் நிறைய ஓட்டைகளோடு தந்துவிட்டு இந்தச் சுமையைச் சுமப்பது தங்கரால் முடியாதது.
------------------------

வாலியை விட வைரமுத்து ஒன்றும் அதிகப்படியில்லை. ஆபாசமாக எழுதுவதில் வாலிக்குச் சளைத்தவருமல்லர். தற்புகழ்ச்சி ஆணவம் என்பவற்றில் வாலியைவிட மிகமிக உயர்ந்தவர்தான் வைரமுத்து.

அறிவுமதியை விமர்சிக்க நான் தயாரில்லை. இப்போதுள்ளவர்களில் என் மனத்தில் மிகமிகமிக உயர்ந்த இடம் அறிவுமதிக்கு உண்டு.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

விடிவெள்ளி, நம்பிக்கை நட்சத்திரம் என்பதெல்லாம் தங்கர் மேல் சுமத்தப்படும் மிகப்பெரிய சுமைதான். அவையே அவரின் அழிவுக்கும் காரணமாகும். வெறும் நாலு படம் மட்டுமே, அதுவும் தானே குறையென்று சொல்லும் நிறைய ஓட்டைகளோடு தந்துவிட்டு இந்தச் சுமையைச் சுமப்பது தங்கரால் முடியாதது.


வாலியை விட வைரமுத்து ஒன்றும் அதிகப்படியில்லை. ஆபாசமாக எழுதுவதில் வாலிக்குச் சளைத்தவருமல்லர். தற்புகழ்ச்சி ஆணவம் என்பவற்றில் வாலியைவிட மிகமிக உயர்ந்தவர்தான் வைரமுத்து.

100% true

குழலி / Kuzhali said...

தங்கரையும், பாவலர் அறிவுமதியையும் வன்னியர் வட்டத்தில் சுருக்குவதில் விருப்பமில்லை, நிச்சயமாக தங்கர் ஒரு நல்ல இயக்குனர், அவரது படங்கள் எதார்த்தத்தை பேசுபவை என்பதிலும் எனக்கு மாற்று கருத்து இல்லை, நாஞ்சில் நாடு, கொங்கு நாடு,ராம் நாடு,செட்டி நாடு என தமிழகத்தின் எல்லா மண் வாசனைகளும் திரையில் வந்தும் நடு நாட்டின் வாழ்க்கை முறை வராதது வருத்தமாகவே இருந்தது, அந்த சமயத்தில் தான் அழகி வந்து வட தமிழ்நாட்டின் மண் வாசனையை திரையில் காண வைத்தது, நாஞ்சில் நாட்டானின் தலை கீழ் விகிதங்கள் 'சொல்ல மறந்த கதை' யாக உருவானதை சொதப்பியதாக சாரு நிவேதிதா வேண்டுமானால் கிண்டலடிக்கலாம், நடு நாட்டின் மண் வாசனையையும் என்னை சுற்றி நடந்த சம்பவங்களையும் அழகாக எடுத்து வைத்தது சொல்ல மறந்த கதை, ஒவ்வொரு காட்சியிலும் இது அவருக்கு நடந்ததே, இப்படி தானே இவருக்கு நடந்தது என்று சொல்லிக் கொண்டே பார்த்தேன் அழகியை விட ஒரு படி மேலேயே சொல்ல மறந்த கதை பிடித்திருந்தது.

கொள்கைகளை காற்றில் பறக்க விடும் திரைப்படத் துறையில் (இதில் தங்கர் பச்சானும் ஓரளவிற்கு அடக்கம்) இன்றும் பணத்தை பற்றி கவலைப்படாமல் கொள்கையோடு இருப்பவர் பாவலர் அறிவுமதி (அவர் கையெழுத்து கண்ணில் ஒற்றிக்கொள்ளும் அளவிற்கு அழகாக இருக்கும்...)

Anonymous said...

நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள்-ஐ படிக்கும்போது அடடா, இந்தப் படத்தை சினிமாவா எடுத்தா எப்படி இருக்க்கும்னு நெனச்சதுண்டு. 'சொல்ல மறந்த கதை'-யை பார்த்ததுக்கு அப்புறம், கடவுளே, நாஞ்சில் நாடனின் 'எட்டு திக்கும் மதயானை'-ஐ தங்கர் படிச்சுறக்கூடாதேன்னு வேண்டிக்கிறேன்.

b said...

நல்லதொரு பதிவு நண்பரே.

ஜெ. ராம்கி said...

ஜோ,

ஒரு சந்தேகம். பி.வாசு படங்களை புகழ்பவர்கள்னா யாருங்கோ? எப்படியோ தங்கர் பச்சானை பி.வாசுவோட கம்பேர் பண்ணி ஒழிச்சுடாதீங்கோ!

கொழுவி,

ஈழத்தமிழர் பற்றி கரிசனை கொண்டிருப்பவர்களை நாம் அரசியல்வாதிகளின் மத்தியில் தேடமுடியும். அதுதான் நியாயமாக இருக்க முடியும்.ஆனால், சினிமாக்காரர்களிடம் அப்படிப்பட்ட பரிவை எதிர்ப்பார்ப்பதோ சரியா அல்லது ஈழம் பற்றிய அனுசரணை கொண்டவர்கள் என்பதற்கு வைக்கும் அளவுகோல்கள் எல்லாம் சரியா என்றெல்லாம் எனக்கு கேட்டு தெரிந்து கொள்ளத்தான் ஆசை. ஆனால் அநாவசியமாக பிரச்னை வருமோ என்றுதான் பயம்.

குழலி,

பாவலர் என்றெல்லாம் பட்டம் கொடுத்தது யாருங்க? அறிவுமதி பாவலர்னா பாரதிதாசனுக்கு என்ன கொடுப்பீங்க? பாவம், அவரும் நடுநாட்டிலிருந்து வந்தவர்தானுங்களே!

தங்கர் பத்தி ஒரு டிப்ஸ். தங்கர்பச்சானின் நாவலோ, சிறுகதையோ ஏதோ ஒரு பல்கலைக்கழகத்துல பாடமாக வெச்சுருக்காங்களாம்! பொறுப்புணர்ச்சி பத்தி போன ஞாயித்துக்கிழமை சாயந்திரம் சன் மியூசிக்ல யாரோ கேட்ட கேள்விக்கு தங்கர் பச்சானே சொன்ன பதில். பாடமா வைக்கிற அளவுக்கு பெரிய ஆளான தங்கர் பச்சான் சொல்றதுல கொஞ்சமாவது உண்மையிருக்கும்னு நிறைய பேர் நினைக்கிறாங்க...

ஜோ/Joe said...

//எப்படியோ தங்கர் பச்சானை பி.வாசுவோட கம்பேர் பண்ணி ஒழிச்சுடாதீங்கோ!//

ராம்கி,
நீங்க தமிழை சூப்பர் ஸ்டாரோடு கம்பேர் பண்ணி யாரை ஒழிச்சீங்கண்ணு சொல்ல முடியுமா?

Anonymous said...

Joe,

Your comments show the aversion on Rajni and Rajni fans.

I think that you are one of the Tamils who strongly believe that Tamil exists for the past 5000 years. And you are one of the poor believers who believe that Tamil can be extinguished by other languages and comparisons.

Mohan

குழலி / Kuzhali said...

//குழலி,

பாவலர் என்றெல்லாம் பட்டம் கொடுத்தது யாருங்க? அறிவுமதி பாவலர்னா பாரதிதாசனுக்கு என்ன கொடுப்பீங்க? பாவம், அவரும் நடுநாட்டிலிருந்து வந்தவர்தானுங்களே!
//
பாவலர் என்பதை பாட்டெழுதுபவர் என்ற பொருளிலேயே நான் விளங்கி கொண்டுள்ளேன், எப்படி தங்கரை இயக்குனர் என்கிறோமோ, மருத்துவர் இராமதாசு என்கிறோமோ அது மாதிரி தான், இதே புரட்சி பாவலர் என்றிருந்தால் வெறுமனே அறிவுமதி என்றே விளித்திருப்பேன்.

அது மட்டுமின்றி எம்மை பொறுத்தவரை ஒரு குறியீட்டை மற்றவருக்கும் வைத்து பேசக்கூடாது என்பதில்லை, அய்யா என்பது மருத்துவர் இராமதாசை குறிக்கும் என்பதை பலரும் அறிந்திருந்தாலும், அழைத்தாலும் என்னை பொறுத்தவரை அய்யா என்பதை சார் என்பதன் தமிழாக்கமாகவே கருதுகின்றேன், அதனால் அய்யா என்பதை ஒரே ஒருவருக்கு மட்டும் வைத்து விளிக்க மாட்டேன்,சிலருக்கு வேண்டுமானால் ஒரு குறியீட்டை ஒரு அடைமொழியை மற்றவர்களுக்கு வைத்து பார்ப்பதை அவர்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது உதாரணமாக புரட்சிகலைஞர் என்பதை ஒரு விஜயகாந்த் இரசிகனால் அவன் வாயால் வேறொரு நடிகரை புரட்சி கலைஞர் என்று அழைப்பது முடியாது, இதே மாதிரி சூப்பர் ஸ்டார் இடத்தில் மற்றொருவரை வைத்து பார்க்க ஒரு ரஜினி ரசிகனால் முடியாது, ஆனால் என்னால் சார் என்றழைப்பதற்கான தகுதியுள்ளவர்களை அய்யா என்றழைப்பதில் கொஞ்சமும் தயக்கமிருக்காது, இதே தான் பாவலர் அறிவுமதி என்று விளித்ததற்கும் காரணம், இதே புரட்சி பாவலர் என்றிருந்தால் நிச்சயம் விளித்திருக்க மாட்டேன். பாவலர் அறிவுமதி என்று கூகிளில் தேடிப்பாருங்கள், எத்தனை பக்கங்களில் பாவலர் என்று அவரை விளித்திருக்கின்றனர் என்பது புரியும்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

தங்கரின் படங்கள் வழக்கமான படங்களை விட ஒரு படி மேல் தான். ஆனால், அவருடைய பின்புலத்திற்காக கொஞ்சம் அதிகமா புகழ்ந்திருப்பதா தான் தோணுது. தென்றல் படம் பத்தி ஏன் யாரும் குறிப்பிடல..அதுவும் நல்ல படம் தான்

ஈழநாதன்(Eelanathan) said...

ராம்கி .ஈழ ஆதரவாளர்கள் கட்டாயம் அரசியல்வாதியாகத் தான் இருக்கவேண்டுமென்று அவசியம் கிடையாது.திரையுலகைச் சேர்ந்தவராக,அரசியல்வாதியாக ஏன் வலைப்பதிவாளராகக் கூட இருக்கலாமே இயக்குனர் ஒருவரிலும் பாடலாசிரியர் ஒருவரிலும் ஈழ ஆதரவைத் தேடுவதில் என்ன தவறு இருக்கிறது

மற்றது நீங்கள் கேட்ட எல்லாவற்றையும் ஈழ அனுசரணை என்னும் அளவுகோலால் அளப்பது பற்றியது.ஈழ அனுசரணை என்று நீங்கள் குறிப்பிடுவது வெறுமனே புலிகளுக்கான ஆதரவா அல்லது ஈழப்போராட்டத்திற்கான ஆதரவா என்று தெரியவில்லை ஆயினும் ஈழ ஆதரவு என்பது அப்படியே விரிந்த வட்டமாகி தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஆதரவு தமிழ் மொழிக்கான ஆதரவு என்று விரிந்துகொண்டே போவதால் ஒருவரை ஈழ ஆதரவாளர் என்று அளப்பது அவரது மற்றைய ஆதரவுகளையும் சேர்த்தே அளக்கும் என நினைக்கிறேன்.நல்ல உதாரணம் வலைப்பதிவாளர்களிலேயே உண்டு

பாரதிதாசனை எதற்காக பாவலர் என்று அழைக்கவேண்டும் அவருக்குத் தான் ஏற்கனவே பாவேந்தர் என்று பட்டம் இருக்கிறதே ஆக அறிவுமதியை பாவலர் என்று அழைத்தால் என்ன இவ்வாறான பட்டங்கள் பல்கலைக்கழகத்தில் கொடுக்கப்படுவதில்லை என்று நம்புகிறேன் (சுப்பர்ஸ்டார் பட்டம் உட்பட).ஈழத்தில் அறிவுமதியை பாவலர் என்றழைப்பதில்லை எழுச்சிக் கவிஞர் என்று குறிப்பிடுவார்கள்

முகமூடி said...

// ஒரு குறியீட்டை மற்றவருக்கும் வைத்து பேசக்கூடாது என்பதில்லை //

இதே காரணத்தால்தான் நான் என்னை கலைஞர். முகமூடி என்று சொல்லிக்கொள்கிறேன். (எனக்கு இசை கருவிகளை வாசிக்க தெரியும்)

திரைப்பட கலைஞரான லூஸ் மோகனை கலைஞர். லூஸ் மோகன் என்றால் ஏனோ சிலருக்கு பிடிப்பதில்லை...

குழலி / Kuzhali said...
This comment has been removed by a blog administrator.
குழலி / Kuzhali said...

//திரைப்பட கலைஞரான லூஸ் மோகனை கலைஞர். லூஸ் மோகன் என்றால் ஏனோ சிலருக்கு பிடிப்பதில்லை...
//
முகமூடி இந்த மாதிரி பொத்தாம் பொதுவாக பின்னூட்டன் விடாதீர், யார் லூஸ்மோகனை கலைஞர் என்று சொன்னதை விமர்சித்தது, சும்மா எப்போ பார்த்தாலும் இந்த மாதிரி பொய்களை அவிழ்த்து விட்டுக்கொண்டு இருக்கின்றீர், திருமாவின் சிங்கப்பூர் பயணத்தை நீர் காழ்ப்புணர்ச்சியோடு கிண்டல் அடித்ததால் தான் அந்த எதிர்ப்பே தவிர லூஸ்மோகனை நீர் கலைஞர் என்று எனக்கு தெரிந்து சொன்னதுமில்லை, அதற்கு எனக்கு தெரிந்து யாரும் எதிர்ப்பு தெரிவித்ததும் இல்லை, பல இடங்களில் பெயர் சொல்லாமல் சில பதிவர்களை குறிக்கும் இது மாதிரியான பின்னூட்டங்களை நிறுத்திக்கொள்ள தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.

நன்றி

ஜோ/Joe said...

Mohan,
//Your comments show the aversion on Rajni and Rajni fans.//

Your comment shows you don't bother chanting Tamil Thai vazhthu for Rajini .So much for your fanatism and height of 'Thani manitha Thuthi'.

//And you are one of the poor believers who believe that Tamil can be extinguished by other languages //

not poor beleiver ,strong beleiver in "Tamil can be exitngusihed by imposing other languages or by mixing other languages more than certain limit"

Anonymous said...

>>பாவலர் அறிவுமதி என்று கூகிளில் தேடிப்பாருங்கள், எத்தனை பக்கங்களில் பாவலர் என்று அவரை விளித்திருக்கின்றனர் என்பது புரியும். <<

Kuzhali,

I tried google search for "பாவலர் அறிவுமதி". It returned 3 results all "OR" and not "AND" combination.

Couldn't spare time to capture the window, place it photbucket and provide the URL here.

Care to validate...?

Anonymous said...

Stunning!! Thatz the beauty of thalaivar !!!

1.) Go to www.google.com

2.) Type in " thalaivar " (without the quotes)

3.) Press Search the web radio button

4.) Now, Press the I'm feeling lucky button (instead of the google search one)

5.) Our website http://www.rajinifans.com/ will be displayed, by default.



6.) Now, Press the Back button. Google will be displayed with previous search keyword as 'thalaivar'

7.) Press Search Pages from India radio button

8.) Now, Press the I'm feeling lucky button (instead of the google search one)

9.) !!! Again its our one and only SS !!!

Wondering how ???

Becoz' everyday around the world, the most number of hits in Google with keyword as 'thalaivar' is for Our SS !!!

Thalaivarnaa athu Super Star thaan!!

Anonymous said...

தங்கர் பச்சான் -விடி வெள்ளி "என் படங்களிலும் தமிழர் பண்பாட்டை காட்டியிருக்கிறேன்"


ஆமாம்.இந்த விடியா வெள்ளி, தமிழர் பண்பாட்டை நல்லாவே காட்டியிருப்பார்... அதாவது அவரைப் பொறுத்தவரை குருவி கொடஞ்ச கொய்யாப்பழமும், ஒரு விதவைப்பெண் முன்னாள் காதலனை அதுவும் வேறொரு பெண்ணை திருமணம் செய்து குழந்தைகளுடன் மகிழ்வாக குடும்பம் நடத்துபவனை நினைத்து "பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா..என்று கனவு காண்பதுவும்

அப்புறம் சொல்ல மறந்த கதையிலும் புஷ்பவனம் குப்புசாமியின் கதாபாத்திரத்தின் மூலமும், மிக நல்லவனாக சித்தரிக்கப்பட்ட கதாநாயகனின் முகத்தில் மாமனார் காறித்துப்புவதிலும் .. அவனது மனைவி இதையெல்லாம் பார்த்துக்கொண்டு எதிர்ப்பே காட்டாமல் வாயில்லா பூச்சியாக இருப்பதும்தான் அவருக்கு தமிழ் பண்பாடாக தெரிகிறது!!! கலிகாலம்.

இதையெல்லாம் ஆழ்மனதின் சீழ்பிடித்த எண்ணங்கள் என்று யாரும் சொல்லப்டாது... அவரை பொறுத்தவரை இதான் வன்னிய தமிழ் பண்பாடோ என்னவோ...

Anonymous said...

தென்றல் படத்தில் உமாவின் பாத்திரப்படைப்பு - innum super

Pot"tea" kadai said...

பொதுவாக யதார்த்தமான திரைப்படங்கள் எனக்குப் பிடித்தம். அந்த வகையில் சிறிது "வியாபாரத் தனம்" இருப்பினும் யதார்த்தம் மற்றும் "மண்ணின் வாசத்தை" தங்கரின் திரைப்படங்களில் காண இயலும்.

ஆமாம், எதற்கு நீங்கள் "தென்றல்" திரைப்படத்தைப் பட்டியலில் சேர்க்கவில்லை. ஒரு பாட்டாளியின் மனவலியை மிக அருமையாக ஒரு பாடலில் விளித்திருப்பார்.அதே போன்று, அழகி மற்றும் சொல்ல மறந்த கதை ஆகிய திரைப்படங்களில் மண்ணின் வாசத்தை மிகத் தெளிவாக வெண்திரையில் கொணர்ந்திருப்பார். அந்த வகையில் தங்கருக்கு எனது வணக்கங்கள்.மேலும் அவர் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை நானும் ஆமோதிக்கிறேன்.

அந்த மரத்தைப் பற்றிய சிறுகதையை நானும் அறிந்திருக்கிறேன்.அந்த சிறுகதையை கடலூரைச் சேர்ந்த "இயக்குநர் சிவக்குமார்", "உருமாற்றம்"என்ற பெயரில் குறும்படமாக எடுத்து "தேசிய விருது" மற்றும் பல "சர்வதேச விருதுகள்" பெற்றதும் குறிப்பிடத் தக்கவை ஆகும்.

kirukan said...

Thangar is a good director.... Tamil film industry needs people like him...

But he should stop talking nonsense to media before that.