Sunday, April 03, 2005

நான் RSS எதிர்ப்பாளன் - 3

காந்தியார் கொலை வழக்கில் அப்ரூவராக மாறிய இந்து மகா சபையைச் சேர்ந்த பாத்வே என்பார் பின்வருமாறு சாட்சியம் அளித்தார்.

1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி நாதுராம் விநாயக் கோட்சே, நாரயணன் ஆப்தேவுடன் பாத்வேவும் சர்வார்கரை சந்திக்க சென்றுள்ளார். அங்கு சர்வார்கார் கோட்சே மற்றும் நாரயணன் ஆப்தேவிடம்
"காந்தியின் சகாப்தம் முடிந்து விட்டது. வெற்றியுடன் திரும்பி வா" என்று கூறி சர்வார்கார் வழியனுப்பி வைத்தாராம்.

சர்வார்கார் ஏன் காந்தியடிகளை கொலை செய்ய முடிவு செய்தார் என்பதை பார்க்கும் பொழுது இன்றைய பாரதீய ஜனதாவின் அத்வானிகளும் நரேந்திர மோடிகளும் எதைத் தேடி அலைகிறார்களோ அதற்கு தான் சர்வார்கரும் அலைந்தார் என்பது தெரிகிறது. அது தான் பதவி, அரசியல் வெறி.

இன்றைய பாரதிய ஜனதா இந்துத்வா மதவெறியை தூண்டி விட்டு ஆட்சியை பிடிக்க துடிப்பது போல அன்றைக்கு இந்து மகா சபை அரசியல் அதிகாரம் பெற காந்தியாரை கொலை செய்வது தான் ஒரே வழி என்று சர்வார்கார் முடிவு செய்தார். இந்துக்களின் பெரும்பகுதியினர் காந்தி பின் அணிவகுப்பதை சர்வார்கார் விரும்பவில்லை. தான் மிகவும் நம்பியிருந்த பிரிட்டிஷாரும் தன்னை புறக்கணித்து விட்டு இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கி விட்டு சென்று விட்டதால் காந்தியை கொன்றால் தான் தனக்கு அரசியல் எதிர்காலம் இருக்கும் என்று முடிவு செய்தார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த அம்பு தான் கோட்சே.

கோட்சே சர்வார்கார் இடையேயான தொடர்பு குறித்த பல விபரங்கள், அப்ரூவர் கொடுத்த சாட்சியங்கள் இருந்தாலும் அதனை வலுவாக நிருபிக்க முடியவில்லை. இது எல்லா பெருந்தலைகளின் வழக்குகளில் இந்தியாவில் நடைபெறுவது வழக்கம் தானே.

இந்தக் கொலை குறித்த விபரங்கள் சர்வார்காரின் மரணத்திற்கு (1966) பிறகு தான் அதிகம் வெளியாகியது. உச்சநீதிமன்ற நீதிபதி கே.எல்.கபூர் தலைமையில் இந்த கொலை வழக்கு பின்னனி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணண கமிஷன் தான் காந்தியார் கொலை வழக்கில் சர்வார்கருக்கு இருந்த தொடர்புகளை அம்பலப்படுத்தியது. ஆனால் இந்த விசாரணை கமிஷனின் அறிக்கைகள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படவில்லை.

சர்வார்காரின் உதவியாளர்களாக இருந்த ராமச்சந்திர கேசர், விஷ்ணு தம்லே போன்றோர் இந்த விசாரணை கமிஷன் முன்பு சாட்சியம் அளித்துள்ளார்கள். இந்த கமிஷன் இறுதியாக சமர்பித்த தன் அறிக்கையில் சர்வார்கார் மற்றும் அவரது குழுவினர் தான் காந்தியாரை கொல்ல சதி திட்டம் தீட்டி கொலையும் செய்தார்கள் என்று தெரிவிக்கிறது. இது நீதி மன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருந்தால் சர்வார்கார் குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டிருப்பார்.

தில்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு மறுபடியும் 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி கோட்சே, ஆப்தே இருவரும் சர்வார்கரை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்கள் என்று சர்வார்கரின் உதவியாளரான விஷ்ணு தம்லே வாக்குமூலம் அளித்தார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததாகவும் கோட்சே சர்வார்கரின் வீட்டிற்கு எப்பொழுது வேண்டுமானாலும் வந்து செல்லக் கூடிய செல்வாக்கு பெற்றிருந்ததாகவும் தன் வாக்குமூலத்தில் இவர் கூறியிருக்கிறார்.

அப்பொழுது உள்துறை அமைச்சராக இருந்தவர் சர்தார் வல்லபாய் பட்டேல்.
அத்வானியை இன்னெரு சர்தார் வல்பாய் பட்டேல் என்று தான் பாரதீய ஜனதா கட்சியினர் கூறுகிறார்கள். அத்தகைய சர்தார் வல்லபாய் பட்டேல் காந்தியாரின் கொலையில் சர்வார்கார் உள்ளிட்ட இந்து மகா சபையைச் சேர்ந்தவர்கள் தான் திட்டமிட்டு செய்ததாக முழுமையாக நம்பினார்

"It was a financial wing of the Hindu Mahasabha directly under Savarkar that (hatched) the conspiracy and saw it through"
என்று சர்தார் வல்லபாய் பட்டேல் கூறியிருக்கிறார்.

இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சர்வார்கார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோர்ட் விசாரணையின் பொழுது தனக்கும் கோட்சே மற்றும் ஆப்தே ஆகியோருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சர்வார்கார் உண்மையை மறைத்து பொய் சொன்னார். அவர்கள் ஏதோ கட்சி தொண்டர்கள் என்ற வகையில் தான் தனக்கு தெரியும் என்று சர்வார்கார் சொன்னார்.

ஆனால் சர்வார்காரின் மறைவுக்கு பிறகு 1967ம் ஆண்டு கோட்சேவின் சகோதரர் கோபால் எழுதிய "காந்தியின் படுகொலையும் நானும்" என்ற புத்தகத்தில் கோட்சேவுக்கும் சர்வார்காருக்கும் இருந்த தொடர்பை அம்பலப்படுத்தியிருக்கிறார். பல இடங்களுக்கு ஒன்றாக செல்லும் அளவுக்கு அவர்கள் இருவருக்கும் நெருங்கிய நட்பு இருந்ததாக கோபால் தெரிவிக்கிறார்.

இவ்வாறு காந்தியாரின் படுகொலைக்கு காரணமான சர்வார்காரின் புகைப்படம் தான் இன்று பாரளுமன்றத்தில் காந்தி, சர்தார் பட்டேல் ஆகியோர் இருக்கும் இடத்திற்கு நேர் எதிராக அலங்கரித்து கொண்டிருக்கிறது.

அந்தமான் விமான நிலையத்திற்கு சர்வார்கார் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இவரைத் தான் பாரதீய ஜனதா தனது வழிகாட்டியாக கொண்டுள்ளது. காந்தியார் சுதந்திரம் வாங்கித் தந்த நாட்டின் பாராளுமன்றத்தில் அவரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய சதிகாரர் சர்வார்கரின் புகைப்படமும் அலங்கரிப்பது இந்தியர்கள் அனைவருக்கும் கேவலம்

அந்தமான் சிறையில் வாடிய பல தியாகிகள் ஊர் பெயர் தெரியாமல் காணாமல் போய் விட்டார்கள். ஆனால் பிரிட்டிஷாருக்கு கூஜா தூக்கியவரின் பெயரில் அந்தமான் விமான நிலையம்

இந்தியாவில் உண்மையான தியாகத்திற்கு என்றுமே மதிப்பு கிடையாது

பதிவுகள் தொடரும்

ஆதாரம் :- Savarkar & Hindutva - The Godse Connection by A.G. Noorani

1 comment:

குழலி / Kuzhali said...

Great Article... Keep it up and continue.... Savarkarin Vesathi thukiluripadharku nanri